ஊதிய உயர்வு வேண்டாம்!


ஆர்கே நகர் எம்.எல்.ஏ தினகரன் தனக்கு ஊதிய உயர்வு வேண்டாம் என்று சட்டப்பேரவை செயலருக்கு இன்று (ஜனவரி 23) கடிதம் எழுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் கடந்த 8 ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி நிறைவடைந்தது. இந்தக் கூட்டத் தொடரில் பல்வறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் மாசோதாவும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின் அடிப்படையில் 55 ஆயிரம் ரூபாயாக இருந்த எம்.எல்.ஏ.க்களின் ஊதியம் 1.05 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போதே எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், "தமிழகம் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளபோது எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு தேவைதானா" என்று கேள்வி எழுப்பினார். மேலும் ஊதிய உயர்வு மசோதாவுக்கு எதிராக, திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கையொப்பமிட்ட கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார்.
இந்நிலையில் ஏற்கனவே தனக்கு ஊதிய உயர்வு தேவையில்லை என்று அறிவித்திருந்த ஆர்கே நகர் எம்.எல்.ஏ தினகரன் இன்று (ஜனவரி 23), அது குறித்துச் சட்ட பேரவைச் செயலாளரிடம் கடிதம் கொடுத்துள்ளார். மேலும் தமிழக அரசில் நிதிப் பிரச்சினை நிலவும் நிலையில் ஊதிய உயர்வு தேவையற்றது என்றும் கடிதத்தில் விளக்கம் அளித்துள்ளார். எம்.எல்.ஏ.க்களின் மாத ஊதியம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தினகரன் இதனைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.