2ஆம் நாள்: ரசிகர்களுடன் கமல்

அரசியல் செயல்பாடுகள் குறித்து நேற்று (ஜனவரி 22) நான்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நடிகர் கமல்ஹாசன், இன்று (ஜனவரி 23) மற்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.
கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ராமேஸ்வரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாக அவர் கூறிய நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து ரசிகர்களிடம் ஆலோசனை நடத்திவருகிறார். ராமநாதபுரம், சிவகங்கை உட்பட 4 மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் ரசிகர்களைச் சந்தித்த அவர் நற்பணி மன்றம் அடுத்த கட்டத்துக்குச் செல்லவுள்ளதாகத் தெரிவித்திருந்தார். அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன என்றும், விரைவில் செயல்படுத்தவுள்ளோம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று 2ஆம் நாளாக அவர் ரசிகர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார். திருச்சி, கரூர், தஞ்சாவூர் உட்பட 27 மாவட்ட நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கான அனுமதிச் சீட்டுக்கள் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டன. ஒரு சீட்டுக்கு ஒரு நிர்வாகி மட்டுமே அனுமதிக்கப்பட்டார். மாவட்டங்களில் உள்ள பிரதான பிரச்னைகள், குறைகள் போன்றவற்றைக் கமல் கேட்டறிந்தார்.
ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பையொட்டி ஏராளமான ரசிகர்கள் கமலின் ஆழ்வார்பேட்டை அலுவலகம் முன்பு குவிந்துள்ளனர். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் அவர் ரசிகர்களைச் சந்தித்துப் பேச இருப்பதாகக் கூறப்படுகிறது.