சிறு வணிகர்களைப் பாதித்த பணமதிப்பழிப்பு!


பாஜக அரசு மேற்கொண்ட பணமதிப்பழிப்பு, பொருள்கள் மற்றும் சேவை வரியினால் (ஜிஎஸ்டி) சிறு வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பொதுத் துறை வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) குஜராத்தில் நடைபெற்ற அசோசம் அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொண்டு தேனா வங்கியின் உதவிப் பொது மேலாளர் எஸ்.ஆர்.மகாபத்ரா கூறும்போது, “சிறு வணிகர்கள் பணமதிப்பழிப்பு, பொருள்கள் மற்றும் சேவை வரியினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடன் பெறுவதற்கான விதிமுறைகளில் மாற்றம் ஏதும் இல்லை என்றாலும் வங்கிக் கடன்களுக்கான அணுகுமுறையில் அவர்கள் பல பிரச்னைகளைச் சந்திப்பதால் அவர்களால் கடனைப்பெற இயலவில்லை. சிறு வணிகர்கள் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்கி இறக்குமதியைக் குறைக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்” என்றார்.
தனியார் வங்கிகளில் கடன் பெறுவதைப் போன்று பொதுத் துறை வங்கிகளில் கடன் பெறுவது அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், “கடன் வழங்குதலில் புதிய முறைகளை மாற்றி வருவதாகவும், தனியார் வங்கிகளோடு ஒப்பிடுகையில் அரசு வங்கிகளின் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார். இனி ஒவ்வொரு காலாண்டிலும் குஜராத்தின் மற்ற நகரங்களிலும் உச்சி மாநாடு ஏற்பாடு செய்ய அசோசம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.