கண்டலேறு அணை: 300 கனஅடி தண்ணீர் திறப்பு!


ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கண்டலேறு அணையில் பெய்த கனமழையை அடுத்து தமிழகத்திற்கு கடந்த 1ஆம் தேதி முதல் இன்று வரை தண்ணீர் திறக்கப்பட்டுவருகிறது.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகம் வரும் கிருஷ்ணா நதி நீரை, இடையில் ஆந்திர விவசாயிகள் திருடுவதாகவும் அதன் காரணமாக நீர்வரத்து குறைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தெலுங்கு கங்கா ஒப்பந்தத்தின்படி கடந்த டிசம்பர் 31ஆம் தேதி கண்டலேறு அணையிலிருந்து வினாடிக்கு 2000 கன அடி தண்ணீரை ஆந்திர அரசு திறந்து விட்டது.
இந்தத் தண்ணீர் அளவை தற்போது மேலும் 300 கன அடி உயர்த்தி 2300 கன அடியாக வந்து கொண்டு இருக்கிறது. இருப்பினும் பூண்டி நீர்த்தேக்கத்துக்கு 283 கன அடி நீர் மட்டுமே வந்துகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்குக் காரணம் ஆந்திர விவசாயிகள் இடையில் மின் மோட்டார் மூலம் தண்ணீரை திருடுவதாகக் கூறும் பொதுப்பணித் துறையினர், இது குறித்து நடவடிக்கை எடுக்க ஆந்திர அதிகாரிகளிடம் புகார் அளித்து இருப்பதாகத் தெரிவித்தனர்.