கனிமொழி பேச்சு: தெலங்கானாவில் வழக்கு!

திருப்பதி ஏழுமலையான் குறித்து தவறாகப் பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் திமுக எம்.பி. கனிமொழிமீது வழக்கு பதிவு செய்ய தெலங்கானா நீதிமன்றம் நேற்று (ஜனவரி 19) உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி முதல் வாரத்தில் திராவிடர் கழகம் சார்பாக திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் கலந்துகொண்ட கனிமொழி, எம்.பிக்களோடு திருப்பதி சென்றது பற்றி பேசும்போது, “நாங்கள் எம்.பிக்கள் என்பதால் சிறப்பு தரிசனத்துக்காக அழைத்துச் செல்லப்பட்டோம். கடவுளின் முன் எல்லாரும் சமம் என்கிறார்களே அது பொய். அதிக காசு கொடுத்து டிக்கெட் வாங்கினால் சிறப்பு தரிசனம். இல்லையென்றால் பத்து மணி நேரம் நிற்க வேண்டும். நாங்கள் உள்ளே நிற்கும்போது இன்னொரு எம்.பி, ‘இத்தனை ஆயிரம் பேர் கடவுளைப் பார்க்க காத்திருந்து வருகிறார்கள். அவர்கள் கேட்டதையெல்லாம் கடவுள் கொடுக்கிறார். ஆனால், நீ எப்படி கடவுளை நம்பாமல் இருக்க முடியும்?’ என்று என்னிடம் கேட்டார்.
நான் திரும்பிக் கேட்டேன். ‘கடவுளின் கண்ணில்படும் அளவுக்கு இதோ ஓர் உண்டியல் இருக்கிறதே... அதற்கு துப்பாக்கி ஏந்திய ஆள் பாதுகாப்பு கொடுக்கிறார். கடவுள் இந்த உண்டியலைப் பாதுகாப்பார் என்று கடவுள் நம்பிக்கையுள்ள உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்றால், நான் எப்படி நம்புவது?’ என்று கேட்டேன்” என்று தெரிவித்திருந்தார்.