மோடி, அமித் ஷா பதிலளிக்க வேண்டும்!


சில பிரச்சனைகள் குறித்துத் தான் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக விஸ்வ ஹிந்து பரிஷத் பிரவீன் தொகாடியா பேட்டியளித்த விவகாரத்தில், பிரதமர் மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் பதிலளிக்க வேண்டுமென்று சிவசேனா கட்சி கூறியுள்ளது.
2002ஆம் ஆண்டு அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தியதாக, ராஜஸ்தானில் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா மீது அம்மாநிலக் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பான விசாரணைக்காகக் கடந்த வாரம் அவரைத் தேடி குஜராத் மாநிலத்திற்கு ராஜஸ்தான் போலீசார் வந்தனர். ஆனால், தொகாடியா தலைமறைவாகிவிட்டதாகத் தகவல் வெளியானது. இதனையடுத்து, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் விஹெச்பி தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
ஜனவரி 15ஆம் தேதியன்று அகமதாபாத் அருகே சுயநினைவு இல்லாத நிலையில் தொகாடியா மீட்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையொன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தொகாடியா, தன்னை என்கவுண்டரில் கொல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அயோத்தி பிரச்சினை, பசுவதைத் தடைச் சட்டம், விவசாயிகள் நலத் திட்டங்கள் குறித்துத் தான் பேசுவதைத் தடுக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகவும், டெல்லி பிரதமர் அலுவலகம் தனக்கு எதிராக குஜராத் போலீசாரைத் தூண்டிவிடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் நேற்று (ஜனவரி 18) ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், போலீசார் வேடத்தில் தொகாடியாவைக் கொல்வதற்காகக் கொலைகாரர்கள் வந்தார்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
“ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் கம்யூனிச ஆட்சிகளின்போது, தங்களுக்கு வேண்டாதவர்களைக் களையெடுக்க, இதுபோன்ற முயற்சிகள் நடப்பது வழக்கம். எமர்ஜென்சி காலத்தில் எதிர்கட்சிகளை முடக்கும் வேலைகளை மத்திய அரசு செய்தது. கடந்த காலத்தில், பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு அத்வானி போன்றவர்கள் ஒடுக்கப்பட்டனர். அதேபோன்று, விஹெச்பி தலைவர் தொகாடியாவின் குரலை ஒடுக்குவதற்குச் சதி நடப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்துத்வா தலைவர்கள் தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறிவரும் நிலையில், இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர் அமித் ஷாவும் விளக்கமளிக்க வேண்டும்.