அமலாக்கத் துறை முன் ஆஜரான கார்த்தி சிதம்பரம்!

கார்த்தி சிதம்பரம் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று (ஜனவரி 18) நேரில் ஆஜரானார். அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் பதிலளித்தார்.
இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜிக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், கடந்த 2009ஆம் ஆண்டு அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் விதிகளுக்கு புறம்பாக மொரிஷியஸ் நாட்டில் இருந்து நிதி பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு உதவி செய்ததாகப் புகார் கூறப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, சிபிஐ சார்பில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. இது தொடர்பாக, நான்கு பெருநகரங்களில் இயங்கிவரும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கடந்த ஆண்டு மே மாதம் கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது மத்திய அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. ஜனவரி 11ஆம் தேதியன்று, இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜராக வேண்டுமென்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவர் நேரில் வரவில்லை. விசாரணை அதிகாரியை, அவரது சார்பில் வந்த நபர்களே சந்தித்தனர்.