வாட்ஸப் வடிவேலு

இளையாராஜா - ரஹ்மான் சண்டை.
அஜித் - விஜய் சண்டை.
அப்புறம் சாதி, மதம், இனம், சினிமா, அரசியல்... இதுல ஏதாச்சும் ஒன்றை பற்றி எதிர்க்கருத்து சொன்னா நாம பெரிய ஆள்.
இப்படித்தான் பலபேர் நினைச்சுக்கிட்டு இருக்காங்க.
‘ரஜினி ஏன் அரசியலுக்கு வரலை, மக்கள் மேல அக்கறை இல்லையா’னு கேட்ட அதே வாய்கள் இன்று, ‘இந்த வயசுல வந்து என்ன பண்ணுறது’னும் ‘சினிமாக்காரர்களை மட்டுமே நம்பி இருக்காதீர்கள் மக்களே’னும் சொல்லிக்கிட்டு இருக்கு. என்னத்தைச் சொல்றது?
அடுத்ததா, என்னடா இன்னும் ஆரம்பிக்கலையேன்னு பார்த்தேன். இதோ ஆரம்பிச்சுட்டாங்கள்ல. நட்சத்திர கிரிக்கெட் பற்றிய வாட்ஸ்அப் மெசேஜ்கள்.
நட்சத்திர கிரிக்கெட்
அன்புள்ள
பெரியோர்களே
தாய்மார்களே
வரும் ஏப்ரல் 17இல் சென்னையில்
கமல்
ரஜினி
விஜய்
விக்ரம்
விஷால்
போன்ற 5 கோடி முதல் 50 கோடி
வரை மட்டுமே
கஷ்டப்பட்டு
உழைத்து
நடித்து
கூலி வாங்கி
அடுத்த வேளை உணவுக்கே
வழியில்லாமல்
அல்லாடும்
கஷ்ட ஜீவனத்தில்
வாழும் ஆதரவற்ற
கூலித்தொழிலாளிகளுக்கு
தற்போது ஒதுங்க நிழல் இன்றி
கொளுத்தும் வெயிலில் வாடும்
திக்கற்ற கலைஞர்களுக்கு
சங்கக் கட்டடம் கட்ட
நிதி திரட்ட நடத்தப்படும் கிரிக்கெட்டை
கண்டு நிதியளிக்க
மாதம் 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை சம்பாதித்து
சென்னை மாநகர புஷ் பேக்
தகர
நரக
ரக ரக
பேருந்துகளில்
வலம் வந்து
வளம் நொந்து
மனம் வெந்து
சொகுசு வாழ்க்கை வாழும்
தமிழ்க்குடி மகன்களை
இளிச்சவாயர்களை
டாஸ்மாக் நேயர்களை
பிறந்த குழந்தையை
பாலுக்கு அழ விட்டுவிட்டு
பண்பாட்டு துரோகிகளுக்கு
பாலாபிஷேகம் செய்யும்
பண்ணாடைகளை
நம்பிக்கையோடு அழைக்கிறோம்.
வாருங்கள்
வந்து எங்கள்
பண்பட்ட விளையாட்டை
பணம் கொடுத்து பாருங்கள்
மனைவி மக்களை மறந்து
கூக்குரல் எழுப்பி
எம்மை உற்சாகப்படுத்த வாருங்கள்
300 ரூபாய் சம்பளம் வாங்கும் ரசிகனிடம் காசு பறிக்க பார்க்கும் நடிகர் சங்கம் 30 கோடி சம்பளம் வாங்கும் நடிகனிடம் பணம் கேட்க மறுப்பது ஏன்?
விட்டால் இவர்கள் வீட்டு மளிகை சாமான்கள் வாங்குவதற்குக் கூட ரசிகனிடம் பணம் கேட்பார்கள் போல.
இதை புரிந்துகொண்ட நடிகர் அஜித், மக்களிடம் பணம் பறிக்காதீங்க. சக நடிகர்களிடம் பணம் கேட்டு நடிகர் சங்கக் கடனை அடையுங்கள் கட்டடம் கட்டுங்கள்.. தினமும் தன் குடும்ப செலவுக்காக சம்பாதிக்கும் மக்களிடம் பணம் பறிப்பது முட்டாள் தனம் என்று நடிகர் சங்கம் நடத்தும் கிரிக்கெட் போட்டியைப் புறக்கணிக்கிறார்.
ஒரு நடிகரே நமக்காக நடிகர் சங்கத்தை புறக்கணிக்க மக்களாகிய நாம் ஏன் அந்தக் கொள்ளையை புறக்கணிக்கக் கூடாது.
ஆம்... யாரும் நேரில் சென்று அந்த கிரிக்கெட் போட்டியை காண வேண்டாம். ரஜினி, கமல்ஹாசன், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் இவர்களிடம் இல்லாத பணமா நம்மிடம் இருக்கிறது?
இதை இப்பவே தடுத்தால்தான் அவர்கள் அடுத்து கக்கூஸ் கட்டவதற்கெல்லாம் நம்மை நாட மாட்டார்கள். 100 ரூபாய் கொடுத்து எனக்கு பார்க்க முடியும் ரசிகனால்.
சென்னை கடலூர் வெள்ளத்தில் மூழ்கியபோது இந்த நடிகர் சங்கம் என்ன செய்தது?
சிந்தியுங்கள். இந்தக் கருத்து பிடித்திருந்தால் ஷேர் செய்யுங்கள். புறக்கணிப்போம் நட்சத்திர கிரிக்கெட்டை.
தமிழ் நடிகர்களின் சம்பளம் ஒரு படத்துக்கு ரூபாய் 5 கோடி முதல் 50 கோடி வரை. சராசரியாக 10 கோடி என்று வைத்துக்கொள்வோம்.
மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு ஐ.டி ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 125 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.
மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு தனியார் நிறுவன ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 250 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.
மாதம் 25 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஓர் அரசு ஊழியர் 10 கோடி சம்பாதிக்க 333 வருடங்கள் பணியாற்ற வேண்டும்.
நம் அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயி 10 கோடி சம்பாதிக்க 760 வருடம் உழைக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 300 ரூபாய் வருமானம் பெறும் கூலி தொழிலாளி 10 கோடி சம்பாதிக்க 1,000 ஆண்டுகள் உழைக்க வேண்டும்.
திரைப்பட நடிகர்/ நடிகைகள் பயன்படுத்தும கார்களின் விலை 50 லட்சத்திலிருந்து ரூ.5 கோடி வரை.
படப்பிடிப்பு தளங்களில் இவர்களது சொகுசு வாழ்க்கை என்பது நமது கேளிக்கை கடவுள் இந்திரன்கூட அனுபவிக்காது. வெளிநாட்டு மது, நட்சத்திர ஹோட்டல் உணவு, இரவு நேர கேளிக்கை, ஒப்பனைக்கு இருவர், உடை அணிவிக்க இருவர், குடைபிடிக்க ஒருவர், கொஞ்சம் வியர்த்தால் கேரவேனில் ஓய்வு.
இவர்கள் ஒரு நேரம் நட்சத்திர ஓட்டலில் உணவு உண்ணும் தொகை நம் விவசாயிகளின் ஒரு மாத உணவுச் செலவு.
ஓராண்டில் மூன்று படங்களில் நடித்து 50 கோடி ரூபாய் சம்பாதித்து10 கோடி வரி ஏய்ப்பு செய்து 5000 ரூபாய்க்கு ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி கொடுத்து விளம்பரம் தேடுபவர்கள்.
பல முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பல கோடிகளில் கட்டடங்கள் கட்டுவது இவர்களிடம் விற்பதற்காக தான்.
நாம் திரைப்படம் பார்க்க செலுத்தும் பணம் தான் இவர்களுக்கு சம்பளமாகச் செல்கிறது.
நிற்க.
மேற்கூறிய இந்த ஏழைகளின் நடிகர் சங்கம் 22 கோடி ரூபாய் கடனில் தவிக்கிறதாம். அதை அடைக்க இவர்கள் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தி ஒரு டிக்கெட் 1,000 ரூபாய்க்கு நம்மிடம் விற்று கடனை அடைக்க போகிறார்களாம்.
புயல் வெள்ளத்தில் நம் மக்கள் அனைத்தையும் இழந்து நிர்வாணமாக நின்றபோது நடிகர் சங்கம் உதவி செய்யாது என்று வெளிப்படையாக சொன்ன இவர்கள் தற்போது நம்மிடம் கிரிக்கெட் மூலமாக வசூல் என்ற வருகிறார்கள்.
ஆகையால் மானமுள்ள நம் மக்கள் இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியைப் புறக்கணிக்க வேண்டும்.
இந்த செய்தியை முடிந்தவரை அனைத்து குழுக்களுக்கும் பகிரவும். அரசியல்வாதிகளிடம் ஏமாறுகிறோம். இந்த கூத்தாடிகளிடமும் ஏமாற வேண்டுமா?
வடிவேல் டவுட்:
இதை உடனே பகிர்வதால் அந்த நிகழ்ச்சி நடக்காமல் போய்விட போகிறதா?
இல்லை... முதல் நாள் மேட்ச்ல அவ்வளவா கூட்டம் இல்லேன்னு போட்டியை கேன்சல் பண்ண போறாங்களா?
அவ்வளவு ஏன்... இத முழுசா படிச்சு பார்க்க கூட நம்மாளுங்களுக்கு நேரமில்லை. யாருக்கும் சப்போர்ட்டாகவோ, எதிர்த்தோ பேசலை. என்னோட கருத்தைச் சொன்னேன். கிரிக்கெட் நடத்தட்டும், நடத்தாம போகட்டும். பொங்கல் வைக்கட்டும், வைக்காம போகட்டும். ஏன்யா எனக்கு இதெல்லாம் ஃபார்வார்டு பண்ணி உயிரை எடுக்கறீங்க?