பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்குத் தண்டனை!


குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்குத் தண்டனை வழங்க புதிய சட்டத்திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய கல்வி ஆலோசனை குழுவின் 65ஆவது கூட்டம் மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெற்றது. அதில், அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம் 2009இல் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்குத் தண்டனை வழங்கும் வகையில் புதிய திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், பெண் குழந்தைகளுக்குக் கல்லூரி படிப்பு வரை இலவச கல்வியை வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் எனவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கென சிறப்பு நவோதயா பள்ளிகளை அமைக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிப் படிப்பை பாதியில் விடும் குழந்தைகளைக் கணக்கெடுப்பது, அடுத்த ஐந்தாண்டுகளில் கல்வி தரத்தை டிஜிட்டல் முறையில் பலப்படுத்துவது, 15 லட்சம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது போன்ற பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.