பட்ஜெட்டில் விவசாயத்துக்கு முன்னுரிமை!

2018ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் விவசாயத் துறைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என மத்திய நிதியமைச்சர் அருன் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஞாயிற்றுக்கிழமை புதுடில்லியில் பட்ஜெட் குறித்து கூறுகையில் “இந்தியாவில் பெரும்பாலான மக்கள் விவசாய துறையை சார்ந்து உள்ளனர். அத்துறையின் லாபமும், வளர்ச்சியும் தெளிவாக இல்லையென்றால், நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி இருக்காது . உணவுப்பற்றாக்குறை இருந்த நம் நாட்டில், தற்போது உணவு உற்பத்தி மிகுதியாக உள்ளது ஆனால் தற்போது அதிக உற்பத்தி காரணமாக, விவசாய பொருட்களின் விலை வீழ்ச்சியடைகிறது.விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விலை சரிவரக் கிடைப்பதில்லை. இதனை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்" என்றார்.
2018-19ஆம் நிதியாண்டில் விவசாயம் மற்றும் உற்பத்தித் துறையில் அதிக வளர்ச்சி இல்லாததால் இந்தியாவின் பொருளாதாரம் கடந்த நான்கு ஆண்டுகளில் முன்பெப்போதும் இல்லாத அளவிற்கு 6.5 சதவிகிதமாக குறையும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டில் இந்தியாவின் விவசாயம் வளர்ச்சி 2.1 சதவிகிதமாக இருக்கின்றது. இதற்கு முந்தைய நிதியாண்டில் 4.9 சதவிகிதமாக இருந்தது என மத்திய புள்ளியியல் அலுவலகம் (CSO) தெரிவித்துள்ளது.