இன்றும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

சென்னையில் காணும் பொங்கலுக்குச் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்றும் (ஜனவரி 16) சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், காணும் பொங்கல் இன்று (ஜனவரி 16) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் அனைத்து சுற்றுலா பகுதிகளுக்கும் குடும்பத்துடன் செல்வார்கள். அதனால், மக்களின் வசதிக்காக அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கோவளம், மாமல்லபுரம், கிஷ்கிந்தா, குயின்ஸ்லேண்ட், பெசன்ட்நகர், பிராட்வே, தாம்பரம், திருவான்மியூர் மற்றும் தீவுத்திடல் உள்ளிட்ட இடங்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதுபோன்று, வேறு சில முக்கிய இடங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக, 17ஆம் தேதி அதிகாலை 3.30 மணி முதல் சென்னை புறநகர் பேருந்து நிலையம், பெருங்களத்தூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.