இந்திய அணி அபார வெற்றி!


நியூசிலாந்தில் நடைபெற்று வரும் 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் இன்று (ஜனவரி 14) இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய ப்ரித்வி ஷா மற்றும் மன்ஜோட் கல்ரா இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொண்டுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 180 ரன்களைச் சேர்த்து வலுவான தொடக்கத்தை வழங்கினர். ப்ரித்வி ஷா 94 ரன்னிலும், கல்ரா 86 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அவர்கள் வலுவான தொடக்கம் அமைத்துக் கொடுத்ததைத் தொடர்ந்து களமிறங்கிய சுப்மன் கில் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்து வந்தார். அவர் 54 பந்துகளில் 63 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் களமிறங்கிய ஹிமான்ஷு ராணா (14), அங்குள் ராய் (6) இருவரும் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆனால் அதன்பின்னர் களமிறங்கிய வீரர்கள் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரினை உயர்த்தினர். அபிஷேக் ஷர்மா 8 பந்துகளில் 23 ரன்களை அடித்து அசத்தினார்.
இந்திய அணி கடைசி 5 ஓவரில் 63 ரன்களை இந்திய அணி சேர்த்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்களைச் சேர்த்தது.
329 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர் மேக்ஸ் ப்ரையான்ட் 29 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஜேஷன் ஷான்ஹா 14 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் தொடர்ச்சியாக ஜோனதன் மெர்லோ (38) மற்றும் பரம் உப்பல் (4) ஆகியோர் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் வாக் மகன் ஆஸ்டின் வாக் 6 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஆனால் மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய தொடக்க வீரர் ஜேக் எட்வர்ட்ஸ் 73 ரன்களைச் சேர்த்து அங்குள் ராய் பந்தில் போல்டு ஆகி வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் ஆஸ்திரேலிய அணி 228 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் சிவம் மவி மற்றும் கமலேஷ் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.