படகு கவிழ்ந்து 4 மாணவர்கள் மரணம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று (ஜனவரி 12) 40 மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டம் தஹானு என்ற பகுதியில் பர்னகா கடற்கரை உள்ளது. அதே பகுதியில் உள்ள போண்டா பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரியை (Ponda School and Junior College) சேர்ந்த சுமார் 40 மாணவர்கள் தனியார் படகில் நேற்று காலை 11.30 மணி அளவில் சுற்றுலா சென்றனர். கடற்கரையில் இருந்து 20 மைல் தொலைவில் அவர்கள் சென்றபோது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதில் 4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்த கடலோரப் பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று 32 மாணவர்களை மீட்டனர். காணாமல் போன 4 மாணவர்களைத் தேடும் பணியில் மீட்பு பணியினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆள் இல்லா விமானம், ஹெலிகாப்டர் ஆகியவையும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.