எதிர் சாட்சியம் அளிப்போரின் பட்டியல்: சசிகலா மனு!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் தனக்கு எதிராகச் சாட்சியம் அளிப்போரின் பட்டியலை அளிக்கக் கோரி சசிகலா தரப்பில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது சகோதரர் தீபக், தீபாவின் கணவர் மாதவன், முன்னாள் தலைமை செயலாளர்கள் ராமமோகன ராவ், ஷீலா பாலகிருஷ்ணன் உட்படப் பலரும் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.
அப்பல்லோ நிர்வாகம் சார்பில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் விவரங்கள் குறித்த ஆவணங்கள் இன்று(ஜனவரி 12) சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளிப்போரின் பட்டியலை அளிக்க வேண்டும் என சசிகலா தரப்பில் விசாரணை ஆணையத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.