பல்கலை தேர்வுகள் ரத்து!


அண்ணா பல்கலை மற்றும் இணைப்பு கல்லூரிகளில் இன்று (ஜனவரி 12) நடக்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 4ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பணிக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். ஜனவரி 12ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் சிறப்பு விடுமுறை அளிக்கப்படுவதாகத் தமிழக அரசு நேற்று அறிவித்தது.
இந்நிலையில், நேற்று (ஜனவரி 11) இரவு போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் வாபஸ் பெற்றனர்.
பொங்கல் பண்டிகைக்காக இன்று முதல் 16ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 17ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. முன்னதாக ஜனவரி, 13ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அண்ணா பல்கலை மற்றும் இணைப்பு கல்லூரிகளில், ஜனவரி 12ஆம் தேதி வரை தேர்வு அறிவிக்கப்பட்டது. தற்போது 12ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதால், அண்ணா பல்கலை உட்பட அனைத்து கல்லூரி, பல்கலைகளிலும் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.