சட்டப்பேரவையா, அல்வா விற்பனை நிலையமா?

தமிழக சட்டப்பேரவையின் பெயரை அல்வா விற்பனை நிலையம் என மாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில் ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த 8ஆம் தேதி ஆளுநர் உரையுடன் ஆரம்பித்துள்ளது. ஆளுநர் உரை மத்திய அரசின் ஜிஎஸ்டி திட்டத்திற்கும், மாநில அரசையும் பாராட்டும் விதமாகவே அமைந்தது. இதனைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தன. இது குறித்து சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், "ஆளுநர் உரை மஸ்கோத் அல்வா போன்று இருந்ததாக விமர்சனம் செய்தார். மஸ்கோத் அல்வா குறித்து நேற்று சட்டப்பேரவையிலும் நகைச்சுவையாக விவாதம் எழுந்தது. ராஜன் செல்லப்பா,"ஆளுநர் உரை, பீமபுஷ்டி அல்வா போல் சிறப்பானது" என்று கூறினார்.
இந்த நிலையில் இந்த விவாதத்தை ட்விட்டரில் பகடியாகச் சாடியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "ஆளுனர் உரை மஸ்கோத் அல்வா: மு.க. ஸ்டாலின், இல்லை... ஆளுனர் உரை பீமபுஷ்டி அல்வா: அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா .
அடேங்கப்பா.... தமிழக சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினை குறித்து எவ்வளவு பொறுப்பாக விவாதிக்கிறார்கள் பாருங்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.