தமிழகத்தில் எய்ம்ஸ்: சுகாதாரச் செயலாளருக்கு நோட்டீஸ்!


தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத மத்திய சுகாதாரச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கத் தஞ்சாவூர் அருகே உள்ள செங்கிப்பட்டி, காஞ்சி மாவட்டம் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, மதுரை மாவட்டம் தோப்பூர், ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆகிய இடங்களைத் தேர்வு செய்து 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி தமிழக அரசு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது.
இதுகுறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் கடைசி விசாரணையின் போது மீண்டும் இடத்தை ஆய்வு செய்து எய்ம்ஸ் எங்கே அமையும்? என்பது குறித்து டிசம்பர் 31க்குள் பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு மத்திய அரசு புத்தாண்டின்போது எய்ம்ஸ் அமைவது குறித்து தெரிவிக்கப்படும் என்றும் தஞ்சையில் கட்ட ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிவித்தது ஆனால் இதில் எந்த இடத்தைத் தேர்வு செய்வது என்று மத்திய அரசு உறுதிப்படக் கூறவில்லை.
மேலும், புத்தாண்டு தினத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
எனவே நீதிமன்ற உத்தரவைக் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றாததால் மத்திய சுகாதார செயலாளர் பிரீதி சுதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், “உயர் நிதிமன்றம் உத்தரவை செயல்படுத்தக் கோரி மத்திய அமைச்சரவைக்கு ஜனவரி 2 நோட்டீஸ் அனுப்பியும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை” என்று கூறியிருந்தார்.