லிம்கா புத்தகத்தில் இடம்பிடித்த ரயில் நிலையம்!


மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மட்டுங்கா ரயில் நிலையம், முழுக்க முழுக்க பெண் பணியாளர்களைக்கொண்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
மத்திய ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் மட்டுங்கா ரயில் நிலையம் மும்பையிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களில் வேலை செய்யும் நபர்கள் அனைவரையும் பெண்களாக நியமிக்க, மத்திய ரெயில்வே துறையின் பொது மேலாளர் டி.கே.ஷர்மா திட்டமிட்டார். இதையடுத்து, ஸ்டேஷன் மாஸ்டர் மம்தா குல்கர்னி தலைமையில், பயணச்சீட்டு விற்பனை, கொடி காட்டுபவர், ரெயில்வே போலீஸார், சிக்னல் பிரிவு அதிகாரி, துப்புரவாளர்கள் என மொத்தம் 41 பெண்கள் சுமார் ஆறு மாதங்களாகப் பணியாற்றி வருகின்றனர். இந்தக் குழுவினர் கடந்த ஆறு மாத காலமாக மட்டுங்கா ரெயில் நிலைய நிர்வாகத்தைத் திறம்பட கையாண்டு வருவதைச் சிறப்பிக்கும் வகையில் இந்தச் சாதனை 2018ஆம் ஆண்டுக்கான லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மத்திய ரயில்வே துறையின் மக்கள் தொடர்பு அதிகாரியான சுனில் உதாசி, “இந்த ரயில் நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாக அனைத்துவிதமான பணிகளையும் பெண்களே சிறப்பான முறையில் நடத்தி வருகின்றனர். பெண்கள் சுயமாக முடிவு எடுக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.