எம்.எல்.ஏ.க்கள் சம்பள உயர்வு: எள்ளி நகையாடும் மக்கள்!


தமிழகம் முழுதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களது ஊதிய உயர்வுக்காகவும், ஓய்வுபெற்ற பின் கிடைக்கும் பணப் பலன் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்தும் ஐந்து நாட்களாகப் போராடிவருகிறார்கள். போக்குவரத்து ஊழியர்களோடு அவர்களது குடும்பத்தினரும் போராட்டத்தில் குதிக்க, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று (ஜனவரி 10) எம்.எல்.ஏ.க்களின் ஊதிய உயர்வுக்கான மற்றும் படிகள் உயர்வுக்கான சட்டத் திருத்த மசோதாவை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். எம்.எல்.ஏ.க்களுக்கான சம்பள உயர்வு பற்றி கடந்த ஜூலை மாதமே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி இதுவரை 55 ஆயிரமாக இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் மாதச் சம்பளம் இனி ஒரு லட்சத்து 5 ஆயிரமாக அதிகரிக்கும்.
இந்த அம்சங்களை முன்னிறுத்தி தற்போது சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறிய பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் உயர்த்தப்படும். அந்த வகையில் ஆகஸ்டு முதல் டிசம்பர் வரையிலான சம்பள உயரவு மட்டும் மூன்று லட்ச ரூபாய் நிலுவைத் தொகையாக வழங்கப்படும்.