ஏடிஎம்முக்கு ஹீட்டர், கம்பளி!


இமாசலப்பிரதேச மாநிலத்தில் தீவிரமான குளிர்கால நிலை காரணத்தால் லஹவுல்ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள கீலாங் என்ற இடத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்துக்கு ஹீட்டர் வைத்து கம்பளி மற்றும் போர்வைகளைக் கொண்டு மூடிவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் கீலாங் பகுதி மேலாளர் சங்கீதா கூறுகையில், பகல் நேரத்தில் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் இயந்திரத்துக்கு ஹீட்டர் வைத்து, கம்பளிகளைக்கொண்டு மூடி வருகிறோம். இங்கு, வெப்பநிலை -25 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருப்பதால், நிலைமை மோசமாக உள்ளது. ஏடிஎம் இயந்திரங்களுக்கான சூடான வெப்பநிலையைப் பராமரிப்பதற்காக வங்கி நிர்வாகம் பல முயற்சிகள் எடுத்துவருகின்றன. பெரும்பாலும், இங்கு ஏடிஎம்கள் குளிர்காலத்தில் மூடப்பட்டு விடும். இதனால் இயந்திரம் ஜாம் ஆகாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
இதுகுறித்து வங்கி மேலாளர் காஜ சமீர் கூறுகையில், “வெப்பநிலை -10 அல்லது -5 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக இருக்கும்போது ஏடிஎம் மூடப்படும். ஏடிஎம் வேலை செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். அதனால்தான், இயந்திரத்துக்குக் கம்பளி மற்றும் ஹீட்டர் வைக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை மிகவும் குறைந்த நிலையில் இருக்கும்போது, ஏடிஎம்களை மூடுவதைத் தவிர வேறு வழி இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.