தமிழக அரசின் மோடி காலண்டர்!


தமிழக அரசு வெளியிட்ட 2018ஆம் ஆண்டுக்கான காலண்டரில் பிரதமர் மோடிக்கு, முதல்வர் பழனிசாமி பூங்கொத்து கொடுக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியையும், தமிழக அரசையும் பாஜக பின்னின்று இயக்கிவருகிறது என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. ஆனால், அதற்கு மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழகத்துக்கு நலத்திட்டங்கள் பெற முடியும் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். அதிமுகவினர் எவ்வளவுதான் விளக்கம் அளித்தாலும் அதிமுக அணிகளாகப் பிரிந்ததற்கும், பிரிந்த அணிகள் ஒன்றிணைந்ததற்கும் காரணம் பாஜகதான் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்த ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத்தொடர் கடந்த 8ஆம் தேதி ஆளுநர் உரையுடன் ஆரம்பித்தது. ஆளுநர் உரையில் முக்கிய பிரச்னைகள் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல், மாநில அரசைப் பாராட்டியும், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியைப் பாராட்டும் விதமாகவும் அமைந்தது. இதுகுறித்து ஸ்டாலின், ஆளுநர் உரையை மத்திய அரசு தயாரித்ததோ என்று சந்தேகம் எழுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆளுநர் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்துவரும் நிலையில், ஆளுநருக்கு ஆய்வு செய்ய உரிமை உள்ளது என்று அமைச்சர்கள் தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில் ஒவ்வோர் ஆண்டும் தமிழக அரசின் சார்பில் காலண்டர் அச்சிடப்பட்டு அரசு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் முதல்வரின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும். அதேபோல 2018ஆம் ஆண்டுக்கும் தமிழக அரசின் சார்பில் காலண்டர் அச்சிடப்பட்டது. இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படமும், ஜெயலலிதாவோடு முதல்வர் பழனிசாமி நிற்கும் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது.