கோரக்பூர் மருத்துவமனையில் தீ விபத்து!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிஆர்டி மருத்துவமனையில் இன்று காலை 10 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏராளமான கோப்புகள் கருகி சாம்பலாயின.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கோரக்பூரில் அரசுக்குச் சொந்தமான பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு இன்று காலை 10 மணியளவில் மருத்துவக் கல்லூரி முதல்வரின் அலுவலக அறையும் மருத்துவமனை அறையும் திடீரெனத் தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்த காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் நோயாளிகளைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு சென்றனர். ஆறு தீயணைப்பு வீரர்களின் ஒரு மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை. ஆனால் மருத்துவமனையில் இருந்த ஏராளமான கோப்புகள் சேதமடைந்துள்ளன. மருத்துவமனையில் மின்கசிவு ஏற்பட்டதே இந்தத் தீவிபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.