தினகரன் தனிக்கட்சி? திவாகரன் விளக்கம்!

தினகரன் தற்காலிக அரசியல் இயக்கம் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
கட்சியும் ஆட்சியும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையிலான அணிக்குச் சென்ற பிறகு, ஆர்.கே நகர் தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றார். தொடர்ந்து தினகரன் தனிக்கட்சியோ அல்லது பேரவையோ தொடங்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது. ஆனால் தினகரன் அதனை மறுத்துவிட்டார். அதிமுக என்னும் கட்சி துரோகிகளின் கையில் உள்ளது. அதனைக் காப்பாற்றவே நாங்கள் போராடி வருகிறோம் என்றும் விளக்கமளித்துள்ள தினகரன், விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக திருச்சியில் இன்று (ஜனவரி 7) செய்தியாளர்களைச் சந்தித்த தினகரனின் உறவினர் திவாகரன், "எங்களுக்கு குறைந்தபட்ச அரசியல் வெளி தேவைப்படுகிறது. ஆகவே தினகரன் தற்காலிகமாக அரசியல் இயக்கம் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது என்று" தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், தினகரன் மற்றவர்களைப்போல் அல்லாமல் சட்டசபையில் நேர்மையாக சத்திய நோக்கோடு பேசவேண்டும், ஆர்.கே.நகரில் எங்களை சமாதி கட்ட நினைத்தார்கள். ஆனால் நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்று கோபுரமே கட்டிவிட்டோம் என்றும் கூறினார்.