போதுமான அளவில் சேமிப்புக் கிடங்குகள்!

இந்தியாவில் உணவு தானியங்களைச் சேமித்து வைப்பதற்கான சேமிப்புக் கிடங்குகள் போதுமான அளவில் இருப்பதாக மத்திய உணவுத் துறை அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 5ஆம் தேதி மக்களவையின் கேள்வி நேரத்தின்போது இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சரான ராம் விலாஸ் பஸ்வான் பதிலளிக்கையில், “தேசிய அளவில் உணவு தானியங்களைச் சேமிக்கும் கிடங்கு வசதி போதுமான அளவில் இருக்கிறது. இந்தியாவில் அதிகபட்சமாக 600 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான உணவு தானியங்களைச் சேமிக்கும் வசதி இருந்தாலே போதும். ஆனால், நம்மிடம் அதைவிடக் கூடுதல் கொள்திறன் கொண்ட சேமிப்புக் கிடங்குகள் நிறையவே இருக்கின்றன.
இந்திய உணவுக் கழகம், மத்திய கிடங்குகள் கழகம் மற்றும் மாநில ஏஜென்சி கிடங்குகள் போன்றவை சார்பாக வைக்கப்பட்டுள்ள கிடங்குகளின் கொள்ளளவு நவம்பர் 30 (2017) வரையில் சுமார் 726.18 லட்சம் மெட்ரிக் டன்னாக இருக்கிறது. எனவே தேசிய அளவில் போதுமான சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. மேலும் 100 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் அமைக்கும் பணி நடைமுறையில் இருக்கிறது” என்றார்.