போக்குவரத்துத் துறையில் ஊழல்!

போக்குவரத்துக் கழகம் கடனில் சிக்கியிருப்பதற்கு அந்தத் துறையில் நடைபெறும் லஞ்சம் ஊழலே காரணம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து தொமுச ,சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 14 தொழிற்சங்கத்தினர் நேற்று முன்தினம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும், பணிக்குத் திரும்பாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேருமென்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரித்திருந்தது. நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
போராட்டத்திற்கு ஆதரவாகவும், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் இன்று (ஜனவரி 6) பாமக சார்பாக கோயம்பேட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு பிறகு செய்தியார்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், "தமிழக போக்குவரத்து துறை 20,000 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது, அதற்கு அந்த துறையில் நடைபெறும் லஞ்சம் மற்றும் ஊழல்தான் காரணம். தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் லாபத்தில் இயங்கும் நிலையில், அரசு போக்குவரத்து துறை மட்டும் நட்டத்தில் இயங்குகிறது" என்று குற்றம் சாட்டினார் அன்புமணி.