மரம் வளர்த்தால் மார்க்!

மரங்களை வளர்க்கும் மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்க ஆலோசனை செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (ஜனவரி 6) அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகம் முழுவதும் உள்ள 5 கோடி மாணவர்கள் தலா 5 மரம் வீதம் வளர்க்க வேண்டும். 5 மரங்கள் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க ஆலோசனை செய்யப்படும். பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை. தமிழகக் கல்வித் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் ஆளுநர் உரையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும். 2017ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 42 திட்டங்களில் 40 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும். 2 கோடி ரூபாய் மதிப்பில் 123 நூலகங்கள் புதுப்பிக்கப்படும். புதிதாக 512 தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 25 கிலோ மீட்டருக்கு ஒன்றாக இருந்த தேர்வு மையம் 10 கிலோ மீட்டருக்கு ஒன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.