ஆளுநர் - சபாநாயகர் சந்திப்பு!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை மறுநாள் (ஜனவரி 8) தொடங்கவிருக்கும் நிலையில், நேற்று (ஜனவரி 5) ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சபாநாயகர் தனபால் சந்தித்தார்.
ஒவ்வோர் ஆண்டும் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரின்போது ஆளுநர் உரையாற்றுவது சட்டப்பேரவையின் மரபாகும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் திங்களன்று (ஜனவரி 8) தொடங்கவுள்ளது.
ஆளுநர் பன்வாரிலால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்துவருகிறார். இதை மாநிலச் சுயாட்சிக்கு எதிரானது என்றும், பாஜக தமிழகத்தை மறைமுகமாக ஆட்சி செய்ய துடிக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. குறிப்பாக முக்கிய எதிர்க்கட்சியான திமுக, ஆளுநர் பன்வாரிலாலைக் கடுமையாக எதிர்த்தது. அவர் ஆய்வுக்குச் சென்ற பல்வேறு இடங்களிலும் கறுப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தியது.
இந்தச் சூழ்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் சபாநாயகர் தனபால் நேற்று (ஜனவரி 5) சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் இதர அறிவிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது மரியாதை நிமித்தமான வழக்கமான சந்திப்புதான் என்று ஆளுநர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.