புகார் அளித்தது யார்?

தன் மீது புகார் அளித்தது யார் என்று கூறினால் மட்டுமே சம்மனுக்கு பதில் அளிப்பேன் என்று விசாரணை ஆணையத்தில் சசிகலா மனு அளித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்து வந்தனர். இதையடுத்து இதுதொடர்பாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு நீதிபதி ஆறுமுகசாமியின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த விசாரணை ஆணையத்தின் முன்பு திமுக மருத்துவரணி நிர்வாகி சரவணன், அரசு தலைமை மருத்துவர் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகள் தீபா மற்றும் தீபக், முன்னாள் தலைமை செயலாளர்கள் ராம்மோகன் ராவ், ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இந்நிலையில் பெங்களுரு சிறையிலுள்ள ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கும் கடந்த மாதம் சம்மன் அனுப்பபட்டிருந்தது. சம்மனில் விசாரணை ஆணையத்தின் முன்பு 15 நாட்களுக்குள் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு சம்மனின் அசல் பிரதி கிடைத்த பிறகு ஆஜராகி விளக்கம் அளிக்கிறேன் என்று சசிகலா பதில் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
ஜெயலலிதாவின் நினைவு தினமான கடந்த டிசம்பர் 5ம் தேதி முதல் சசிகலா சிறையில் மௌன விரதத்தில் இருப்பதாகவும், அவருக்கு பதிலாக வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்றும் தினகரன் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 5) இது தொடர்பாக விசாரணை ஆணையத்தின் முன்பு சசிகலாவிற்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜரானார்.
அவர், "விசாரணை ஆணையம் அனுப்பிய சம்மனில் சசிகலா நலனுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்மனுக்கு உரிய பதில் அளிக்க வேண்டுமென்றால், யார் குற்றச்சாட்டு தெரிவித்தது என்ற விவரத்தைக் கொடுக்க வேண்டும். விசாரணை ஆணையம் அளிக்கும் விவரத்தின்படி 15 நாட்களில் பதிலளிக்க தயாராக உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.