வாட்ஸப் வடிவேலு

சத்தியமா சூப்பர் ஸ்டோரிங்க... இதைத் தவறாமல் படித்ததும் பகிருங்கள் நண்பர்களே.
ஒரு குட்டி கதை.
ஓர் ஊரில் பெரிய கோயிலின் கோபுரத்தில் நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன. திடீரென்று கோயிலில் திருப்பணி நடந்தது. அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடி பறந்தன.
வழியில் ஒரு தேவாலயத்தைக் கண்டன. அங்கு ஏற்கெனவே சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்தப் புறாக்களும் குடியேறின.
சில நாள்கள் கழித்து கிறிஸ்துமஸ் வந்தது. தேவாலயம் புதுப்பிக்க தயாரானது. இப்போது கோயிலிலிருந்து சென்ற புறாக்களும் அங்கு இருந்த புறாக்களும் வேறு இடம் தேடி பறந்தன.
வழியில் ஒரு மசூதியைக் கண்டன. அங்கும் சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்தப் புறாக்களும் குடியேறின
சில நாள்கள் கழித்து ரமலான் வந்தது. வழக்கம்போல் இடம் தேடி பறந்தன.
இப்போது மூன்று இடத்திலும் உள்ள புறாக்களும் கோயிலில் குடியேறின.
அங்கு, கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரையொருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.
ஒரு குஞ்சுப்புறா தாய்ப் புறாவிடம் கேட்டது, “ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள்?”
அதற்கு அந்த தாய்ப் புறா, “நாம் இங்கு இருந்தபோதும் புறாதான். தேவாலயத்துக்கு போனபோதும் புறாதான். மசூதிக்கு போனபோதும் புறாதான். ஆனால், மனிதன் கோயிலுக்குப் போனால் இந்து. சர்ச்சுக்குப் போனால் கிறிஸ்துவன். மசூதிக்கு போனால் முஸ்லிம்” என்றது.
குழம்பிய குட்டி புறா, “அது எப்படி நாம் எங்கு போனாலும் புறா தானே அதுபோல தானே மனிதர்களும்” என்றது.
அதற்கு தாய்ப் புறா, “இது புரிந்ததனால்தான் நாம் மேலே இருக்கிறோம். அவர்கள் கீழே இருக்கிறார்கள்” என்றது..
நிஜமே நல்ல கதைதான். ஆனா, நம்மாளு எழுதினதுல அவ்ளோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்.
‘சத்தியமா’ என்கிறதுக்கு ‘சத்தியபாமா’ன்னு டைப் பண்ணியிருக்கான். ‘தாய்ப்புறா’வுக்கு ‘தாயப்புறா’ன்னு டைப் பண்ணியிருக்கான்.
எல்லாத்தையும் மாத்தி, எழுதின பிறகுதான் புரிஞ்சது. பாதிக்கதை தாயப்புறான்னே படிச்சிட்டு இருந்தேன்.