சுகாதாரத் துறையில் பணி: மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை!

சுகாதார ஆய்வாளர் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அறிக்கையை வெளியிட வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, “தமிழகத்தில் நகராட்சிகளில் உள்ள காலியாக உள்ள 110 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கக் கோரி நகராட்சி நிர்வாக ஆணையர் அறிவித்துள்ளார்.
அதன்படி வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாளாகும். மத்திய மாநில அரசுகள், சுகாதார ஆய்வாளர் பணியை மாற்றுத்திறனாளிகளும் செய்யக்கூடிய ஒன்றாக அங்கீகரித்துள்ளன.
பல்வேறு நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் இந்தப் பணியில் உள்ளனர். ஆனால், நகராட்சி நிர்வாக ஆணையர் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை மறுக்கும் விதத்தில் செயல்பட்டுள்ளார். ஊனமுற்றோர் புதிய உரிமைகள் சட்டம் 2016இன் படி குறைந்தபட்சம் 4 சதவிகிதப் பணியிடங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும்.