கொசஸ்தலை ஆற்றில் மீனவ மக்கள் போராட்டம்!

சென்னையை அடுத்த எண்ணூரில் அனல் மின் நிலையத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து இன்று (ஜனவரி 3) கொசஸ்தலை ஆற்றில் இறங்கி மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பழவேற்காடு வடக்குப் பகுதியிலிருந்து எண்ணூர் முகத்துவாரம்வரை கொசஸ்தலை ஆறு பாய்கிறது. கடந்த 1996ஆம் ஆண்டு மத்திய அரசின் கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டம் வெளியிட்ட வரைபடத்தில் இந்த கொசஸ்தலை ஆறு இடம் பெற்றுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட வரைபடத்தில் கொசஸ்தலை ஆறு இடம் பெறவில்லை. எண்ணூர் துறைமுகம், வல்லூர் அனல் மின் நிலையம் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளால் கொசஸ்தலை ஆறு சுருங்கியுள்ளது.
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆக்கிரமிப்பு செய்து மணல் பாதை அமைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து கிராம மக்கள் தொடர்ந்து புகார் அளித்துவந்தனர். இந்நிலையில் ஆற்றின் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும், ஆற்றிற்குப் பாதிப்பில்லாமல் வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் எண்ணூர் முகப்பேர் அருகேயுள்ள கொசஸ்தலையாற்றில் இறங்கி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை மீனவ கிராம மக்கள் அத்திப்பட்டு சாண்டி முத்து மாரியம்மன் கோயில் அருகே கொசஸ்தலை ஆற்றில் இறங்கி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்களும் பங்கேற்றனர்.