ரத்த தானம் செய்தால் லீவு!

மத்திய அரசு ஊழியர்கள் ரத்த தானம் செய்தால் சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்படும் எனப் பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது ரத்த தானம் செய்பவர்களுக்கு விடுப்பு அளிக்கப்படவுள்ளது. ரத்தத்தின் உட்பிரிவுகளை தானமாக வழங்குபவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட மாட்டாது.
மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரத்த தானம் செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்குத் தற்போது சிறப்பு விடுப்பு அளிக்கப்படுகிறது. ரத்த தானம் அல்லது சிகப்பணுக்கள், பிளாஸ்மா,ப்ளேட்லெட்ஸ் உள்ளிட்டவற்றை தானமாக வழங்குபவர்களுக்கும் இது பொருந்தும். ஆனால் ரத்தத்தின் உட்பிரிவுகளை (Apheresis) தானமாக வழங்குபவர்களுக்கு விடுப்பு அளிக்கப்படுவதில்லை. உரிமம் பெற்ற ரத்த வங்கிகளில் வேலைநாட்களில் ரத்த தானம் செய்ய வேண்டும். ஆண்டிற்கு நான்கு முறை இந்தச் சிறப்பு விடுப்பை எடுக்கலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.