பெயரில்லாத கீர்த்தி சுரேஷ்

தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்குப் பெயரே கிடையாது என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். பைரவா படத்திற்குப் பின்பு இவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, “இந்தப் படத்தில் நான் பிராமணப் பெண் வேடத்தில் நடிக்கிறேன். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திரத்திற்குப் பெயரே கிடையாது. ஹ்யூமர் கலந்த சஸ்பென்ஸ் வேடம்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “பள்ளிப் பருவத்திலேயே நான் சூர்யாவின் மிகப் பெரிய ரசிகை. என்னுடைய அம்மா சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமாருடன் மூன்று படத்தில் நடித்துள்ளார். நான் ஸ்கூல் படிக்கும்போது சிவகுமார் சாரின் மகன் சூர்யாவுடன் ஒரு நாள் கதாநாயகியாக நடிப்பேன் என்று கூறியிருந்தேன். அது இன்று நிஜமாகியுள்ளது எனக்கு மகிழ்ச்சி. சூர்யா சார் மிகவும் அமைதியானவர். அதிகம் பேச மாட்டார். ஆனால் அவரிடம் நான் சந்தேகம் கேட்கும்போது எனக்கு சொல்லிக் கொடுத்து உதவுவார். செந்தில் சாரோட நடித்தது ஒரு நல்ல அனுபவம். அவர் டெடி பியர் போல கியூட்டான மனிதர். அவரோடு நடித்தது எனக்கு மறக்க முடியாத நல்ல அனுபவம்” என்று தன் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.