கோலி அமைக்கும் வியூகம்!

தென்னாப்பிரிக்க, இந்திய அணிகளுக்கு இடையேதான் போட்டி, எனக்கும் டிவிலியர்ஸுக்கும் அல்ல என்று இந்திய அணித் தலைவர் விராட் கோலி கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் நடக்கும் போட்டிகள் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்திய, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டித் தொடர் வரும் 5ஆம் தேதி (ஜனவரி) தொடங்கவுள்ளது. இந்திய வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். போட்டி குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கோலி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
“விராட் கோலிக்கும் (எனக்கும்) ஏபி டிவிலியர்ஸ்க்கும் இடையே நடைபெறும் போட்டி என பலர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெறும் போட்டி இது. நாங்கள் சிறந்த நண்பர்கள். தற்போது எதிர் எதிர் அணியில் விளையாடுகிறோம். நாங்கள் டிவிலியர்ஸ் விக்கெட்டைக் கைப்பற்ற முயற்சி செய்கிறோம். அதேபோல் தென்னாப்பிரிக்கா அணி என்னுடைய விக்கெட்டைக் கைப்பற்றவும் ரஹானே அல்லது புஜாரா விக்கெட்டை வீழ்த்தவும் முயற்சி செய்வார்கள்” என்று தெரிவித்தார்.