ஆந்திர அரசின் அறிவிப்புக்காகக் காத்திருக்கும் திருப்பதி

Published On:

| By Balaji

வழிபாட்டுத் தலங்களை ஜூன் 8 முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் மாநில அரசின் முறையான அறிவிப்புக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கொரோனா தொற்று பரவலை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வர பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏழுமலையானுக்கு நடைபெறக் கூடிய ஆறுகால பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் போன்றவற்றுக்குத் தளர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மாநில அரசு உத்தரவுக்காக திருப்பதி தேவஸ்தானம் காத்திருப்பதாகவும், உத்தரவு வந்த உடன் பக்தர்களைக் கோயிலுக்கு அனுமதிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

6 முதல் 8 அடி தூரம் வரை சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க ஏதுவாக, கோயிலுக்குச் செல்லும் வழியெங்கும் ஸ்டிக்கர் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பதியில் இருந்து திருமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கும், திருமலையில் வரிசையில் செல்லும் பக்தர்களுக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முகக் கவசம் மற்றும் கையுறைகள் அணிய வேண்டும் என்ற நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மாநில அரசிடமிருந்து அறிவிப்பு வெளி வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை (ஜூன் 8) முதல் ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

**-ராஜ்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share