காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே பிரபல ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்து இருந்த அரசுக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா எனப்படும் குணசேகரன். இவர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து , அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் எட்டு கொலை வழக்குகள்.
பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ள இவர், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானார். தற்போது காஞ்சிபுரம் போலீசார், தனிப்படையினர் அமைத்து தேடி வருகின்றனர். ரவுடி படப்பை குணா, அரசு நிலத்தையும் விட்டு வைக்கவில்லை. காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் ஏரி அருகே உள்ள அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வந்தார்.
தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்பில் உள்ள ஏரி மற்றும் நீர்நிலைகளை கண்டறிந்து உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வருவாய் மாவட்ட அதிகாரி பன்னீர்செல்வம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த ஒரு மாத காலமாகவே ஆக்கிரமிப்பில் இருந்த பல கோடிமதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டன.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் ஏரி அருகே உள்ள அரசுகு சொந்தமான 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக விவசாய நிலமாக பயன்படுத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்பதும் நிலத்தின் மதிப்பு ரூ.5 கோடி என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, வருவாய் மாவட்ட அதிகாரி பன்னீர்செல்வம் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இன்று(ஜனவரி 22) 5 ஏக்கர் நிலத்தை மீட்டனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்திற்கு நேரில் சென்று இயந்திரம் மூலமாக நிலத்தை சமநிலைப்படுத்தினர்.
**-வினிதா**
�,