தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராகச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் தரவரிசைப் பட்டியலில் சிறந்த நிர்வாகம் செய்து வரும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசுத் தரப்பில் கடந்த ஆண்டு இறுதியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து ஸ்டாலின் முதல்வர் குறித்தும், அதிமுக ஆட்சி குறித்தும் விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதுபோன்று குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகக் கோலம் வரைந்த ஆறு பேரை போலீசார் கைது செய்ததைத் தொடர்ந்து அதிமுக ஆட்சிக்கு எதிராக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராகச் சென்னை மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இரண்டு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது. அரசு தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்குகள் நீதிபதி செல்வக்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் ஸ்டாலின் வரும் மார்ச் 4ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
அதுபோன்று கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசையும், உள்ளாட்சித் துறை அமைச்சரையும் விமர்சித்துப் பேசியதாக ஸ்டாலின் மீது அமைச்சர் தரப்பில் மற்றொரு அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி செல்வக்குமார் சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
**-கவிபிரியா**�,