விலையில்லா பாடப்புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கு, சொந்த செலவில் எடுத்து செல்ல வேண்டும் என கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள், ஆசிரியர்களை நிர்பந்தம் செய்வதால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சை பகுதியில் 140-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், புத்தகப் பைகள், காலணிகள், சைக்கிள்கள், சீருடைகள் மற்றும் கணித உபகரணங்கள் போன்றவற்றை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தப் பொருட்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து மொத்தமாக லாரிகளில் தஞ்சை மாவட்டத்துக்குக் கொண்டு வரப்பட்டன.
ஒவ்வொரு வட்டாரத்துக்கு ஒரு பள்ளியில் இறக்கிவைத்து அங்கிருந்து மற்ற பள்ளிகளுக்குக் கொண்டு செல்லப்படுவது வழக்கம். அதன்படி தஞ்சை வட்டாரத்தில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், சீருடைகள் எல்லாம் தஞ்சையை அடுத்த ரெட்டிப்பாளையம் நடுநிலைப் பள்ளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடப்புத்தகங்கள், சீருடைகளை வட்டாரம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு எடுத்து செல்ல அந்தந்த பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர்.
இந்தப் பாடப்புத்தகங்கள் மற்றும் பொருட்களை எடுத்து செல்ல அதற்கான செலவு தொகையை அரசு ஒதுக்கீடு செய்தும், ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் வந்து எடுத்து செல்ல வேண்டும் என நிர்பந்தம் செய்வதால் இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதுகுறித்து பேசியுள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் கார்த்திகேயன், “தமிழக அரசு மாணவர்களின் நலனுக்காக அவர்களுக்கு தேவையான பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது. இந்தப் பொருட்களை வட்டாரத்துக்கு ஒரு பள்ளி வீதம் தேர்வு செய்து அங்கு கொண்டு வந்து இருப்பு வைத்து, அங்கிருந்து பிரித்து விநியோகம் செய்யப்படுகிறது.
இந்தப் பொருட்களை அந்தந்த பள்ளிகளுக்கு நேரில் கொண்டு செல்ல வேண்டும் என கல்வித் துறைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இந்த உத்தரவுக்கு மாறாக ஆசிரியர்களை நேரில் வந்து புத்தகங்களை எடுத்து செல்ல நிர்பந்தம் செய்யப்படுகிறது. புத்தகங்களை எடுத்து செல்வதற்கான செலவு தொகைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தொகையை செலவு செய்யாமல் ஆசிரியரின் சொந்த செலவில் லோடு ஆட்டோக்களில் பொருட்களை எடுத்துச்செல்ல நிர்பந்தம் செய்கின்றனர்” என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, “ஒரு பள்ளியில் கொண்டு வந்து பொருட்களை வைத்து, அங்கிருந்து பிரித்து அனுப்புவது வழக்கம். ஆசிரியர்கள் வந்து எடுத்து செல்கின்றனர். ஆசிரியர்களின் கோரிக்கையை அரசுக்கு கூறி, இனி வருங்காலத்தில் அதற்கான நிதியை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
**-ராஜ்**
.�,