நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி – விவசாயிகள் வேதனை!

Published On:

| By Balaji

நாமக்கல் மாவட்டம், திருமணிமுத்தாற்றில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் நீர்வரத்து இல்லாமல் மதியம்பட்டி ஏரி மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூரை அடுத்த மதியம்பட்டி ஊராட்சியில் உள்ளது மதியம்பட்டி ஏரி. இந்த ஏரிக்கு சேலம் சேர்வராயன் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் திருமணிமுத்தாறு ஆற்றின் வழியாக வருகிறது. பின்னர் இந்த ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீர் மீண்டும் திருமணிமுத்தாற்றின் வழியாகச் சென்று பரமத்திவேலூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது.

மதியம்பட்டி ஏரி நீரை நம்பி அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் நெல், பருத்தி, தென்னை ஆகியவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதியம்பட்டி ஏரிக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் திருமணிமுத்தாற்றில் ஆகாய தாமரைகள், முட்செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. தற்போது சேர்வராயன் மலை மற்றும் சேலம் பகுதியில் நல்ல மழை பெய்தாலும் ஆக்கிரமிப்புகள் காரணமாக திருமணிமுத்தாற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் மதியம்பட்டி ஏரிக்குத் தண்ணீர் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது.

நீர்வரத்து இல்லாததால் மதியம்பட்டி ஏரி தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. ஏரியில் செடிகள், புற்கள் முளைத்து மேய்ச்சல் நிலம்போல் காட்சியளிக்கிறது. இதனால் சிலர் அங்கு ஆடு, மாடுகளை மேய்த்து வருகின்றனர்.

போதிய மழை பெய்தும் தண்ணீரின்றி ஏரி வறண்டு காணப்படுவதால் அதை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

எனவே, திருமணிமுத்தாற்றில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி மதியம்பட்டி ஏரிக்குத் தண்ணீர் வருவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share