Y
புறநகர் ரயில்களில் பயணிப்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது ரயில்வே அதிகாரிகளின் கடமை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வசிக்கும் தனது தாயை பார்ப்பதற்காக திண்டுக்கல்லில் இருந்து வந்த இந்துராணி(38) என்பவர் புறநகர் ரயிலில் சென்றபோது, கோடம்பாக்கம் – நுங்கம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையில், ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதற்கு இழப்பீடு வழங்கக் கோரி ரயில்வே தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில், பயணச்சீட்டு இல்லாததால், அவர் பயணம் செய்தார் என்பதை எப்படி உறுதி செய்வது எனக் கூறி வழக்கை நிராகரித்து விட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் புறநகர் ரயில்களில் பயணம் செய்வோர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ரயில்வே அதிகாரிகளின் கடமை என்று கூறினார். மேலும், ரயில்களில் கதவுகள் திறந்த நிலையிலேயே இருப்பதால் இம்மாதிரியான சம்பவம் நடக்கிறது, இருந்தாலும் இதிலிருந்து அதிகாரிகள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.
கவனகுறைவாக இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டது எனக் கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மறுக்க முடியாது. பயணிகளுக்கு போதுமான வசதிகளை செய்து தராத ரயில்வே நிர்வாகத்துக்கும் இதில் பங்கு உள்ளது. எனவே, உயிழந்தவரின் குடும்பத்துக்கு 8 லட்சம் ரூபாய் இழப்பீட்டை ஆறு சதவீத வட்டியுடன் தர வேண்டும் என உத்தரவிட்டார்.
**வினிதா**
�,