பீகாரில் கொரோனா பாதிப்பால் திருமணத்திற்கு மறுநாள் மணமகன் இறந்ததை தொடர்ந்து, திருமணத்தில் கலந்து கொண்ட 111 விருந்தினர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பீகாரில் இதுவரை 9 ஆயிரத்து 744 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 62 பேர் இறந்துள்ளனர், 7 ஆயிரத்து 544 பேர் நோய்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில், பீகார் மாநில தலைநகர் பாட்னா அடுத்த பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கும், அவரது சொந்தத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த ஜூன் 15ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் 350 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். **குர்கானில் வசித்து வந்த மணமகனுக்கு திருமணத்திற்கு முன்னரே உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார்.** பின்னர் உறவினர்களின் வற்புறுத்தலோடு மணமகன் மாத்திரைகளை எடுத்துக்கொண்டு திருமணத்தில் பங்கேற்றுள்ளார் எனக் கூறப்படுகிறது.
**திருமணம் முடிந்த அடுத்த நாளில் மணமகனின் உடல்நிலை மோசமடையவே, பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.** இந்நிலையில், குடும்பத்தினர் உயிரிழந்தவருக்கு இறுதி சடங்கு செய்துவிட்டதால், உயிரிழந்த மணமகனுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனையை செய்ய முடியவில்லை. அதன் பின்னர் குடும்பத்தினர் சிலர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 15ஐ தொட்டதும், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் திருமணம் மற்றும் இறுதி சடங்கில் கலந்து கொண்ட 400 பேருக்கும் சோதனை மேற்கொண்டனர். மேலும், அதிக பரிசோதனைகளை நடத்திடவும் அடையாளம் காணவும், தனிமைப்படுத்தவும் ஜூன் 24 முதல் 26 வரை ஒரு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இவற்றில், 86 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது(குடும்ப உறுப்பினர்களுடன் சேர்த்து மொத்தமாக 111 பேர்). அவர்கள் அனைவரும் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
**பீகாரில் முதன்முறையாக கொரோனா தொற்று அதிகம் பேருக்கு பரவிய முதல் நிகழ்வு இதுவாகும்.** மணமகனின் குடும்பத்தினர் அதிகாரிகளுக்கு உரிய தகவல் அளிக்காமல் இறுதி சடங்கை செய்துவிட்டதால், மணமகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாரா என்பதை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை. வைரஸ் கட்டுப்பாடுகளை மீறி திருமணத்தில் கலந்து கொண்டவர்கள், திருமண நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் என 50க்கும் மேற்பட்டோர் மீது விசாரணை நடத்த மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருமணம் மற்றும் இறுதி சடங்கு நிகழ்வுகளில் எத்தனை நபர்கள் பங்கேற்க வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்திருந்தும் அதை பின்பற்றாததே இந்த தொற்று பரவலுக்கு முக்கிய காரணம் என தெரியவருகிறது.
**-முகேஷ் சுப்ரமணியம்**
�,