pவிமரிசையாக நடந்த ஆண்டாள் திருக்கல்யாணம்!

Published On:

| By Balaji

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஆடிப்பூர கொட்டகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வேத மந்திரங்கள் முழங்க பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் தேரோட்டம் போன்று ஶ்ரீஆண்டாள் திருக்கல்யாண விழாவும் மிகப் பிரபலமானது. இந்த விழாவில் தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொள்வது வழக்கம்..

இந்த ஆண்டு இக்கோயில் பங்குனி திருக்கல்யாண உற்சவம் கடந்த மார்ச் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆண்டாள், ரெங்கமன்னார் சுவாமிகள் எழுந்தருளல், இரவில் பல்வேறு வாகனங்களில் திரு வீதி உலா ஆகியவை நடைபெற்றது. திருவிழாவின் 9 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று திருக்கல்யாணத்தை முன்னிட்டு காலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் செப்புத் தேரில் எழுந்தருளி செப்புத்தேரோட்டம் நடைபெற்றது.

முன்னதாக காலை ஆண்டாள் ரங்கமன்னார் கோயிலில் இருந்து மேளதாளம் முழங்கக் கோயில் அருகே உள்ள செப்பு தேர் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டனர். பின்னர் செப்பு தேரில் ஆண்டாளுக்கும் ரெங்கமன்னாருக்கும் சிறப்பு பூஜை நடைபெற்ற பின் செப்பு தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று இரவு ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் வைபோகம் வேதமந்திரங்கள் முழங்க விமர்சையாக நடந்தது. திருக்கல்யாண வைபவத்தின்போது ஆண்டாள் அணிந்துகொள்ளத் திருப்பதியிலிருந்து பட்டு வஸ்திரம் கொண்டுவரப்படுவது வழக்கம். அதன்படி, திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து சனிக்கிழமை காலை பட்டு வஸ்திரம் கொண்டுவரப்பட்டது. அந்த பட்டு வஸ்திரங்களால் ஶ்ரீஆண்டாள் மணப்பெண் அலங்காரத்தில் இருக்க ரெங்கநாதர் மாப்பிள்ளை அலங்காரத்தில் இருக்க வேதபாரயண முறைப்படி திருக்கல்யாண வைபோகம் நடந்தது.

இதில் மாவட்ட ஆட்சியர் கண்ணன், டிஐஜி சுதாகா், , தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதுபோல் மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத் தினத்தன்று திருகல்யாணம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலையில் வியூக சுந்தர்ராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள், மேளதாள வரவேற்புகளுடன் சந்நிதியில் எழுந்தருளினார். அங்கு, கல்யாண அலங்காரங்களுடன் எழுந்தருளிய சீதேவி, பூதேவி, மதுரவல்லித் தாயார் மற்றும் ஆண்டாள் ஆகியோருக்கு வியூக சுந்தர்ராஜப் பெருமாள் மாங்கல்ய நாண் பூட்டும் வைபவம் நடைபெற்றது.

இதையடுத்து, சீதேவி, பூதேவி, மதுரவல்லித் தாயார் மற்றும் ஆண்டாள் திருக்கல்யாண கோலத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தனர். மேலும், திருக்கல்யாணத்தில் பங்கேற்ற பக்தா்களுக்கு திரு மாங்கல்யம் பிரசாதமாக வழங்கப்பட்டது. திருக்கல்யாண விருந்தும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

-சக்தி பரமசிவன்

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share