கோவையில் ஏர்செல் செல்பேசி தொடர்பு கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் நேற்று (பிப்ரவரி 21) ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஏர்செல் டவர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதற்கான முறையான விளக்கமும் அந்த நிறுவனத்திடமிருந்து கிடைக்கவில்லை. இதையடுத்து நூற்றுக்கணக்கான ஏர்செல் வாடிக்கையாளர்கள் நேற்று கோவை அண்ணா சிலைப் பகுதியில் உள்ள ஏர்செல் வாடிக்கையாளர் மையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது செல்போன் டவர்களைப் பராமரிக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு ஏர்செல் நிறுவனம் பாக்கியைத் தராமல் நிறுத்திவைத்ததன் காரணமாக அனைத்து டவர்களும் செயலிழந்து வருவதாகவும், இந்தப் பிரச்னை தொடர்பாக தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்றும் அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
அதேபோல் ஏர்செல் சேவை துண்டிப்பைக் கண்டித்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏர்செல் மையத்தையும், பழைய வண்ணாரப்பேட்டையில் ஏர்செல் கிளை அலுவலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் ஏர்செல் செல்பேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் எல்லைப் பிள்ளைச் சாவடியில் உள்ள அந்த நிறுவனத்தின் சேவை மையத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். இரண்டே ஊழியர்கள் அங்கிருந்ததால் வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளிக்க முடியாமல் திணறினர். தொலைபேசி தொடர்பு துண்டிப்பு குறித்து நிறுவனம் தங்களுக்கு ஏதும் தகவல் தெரிவிக்கவில்லை என அவர்கள் கூறினர்.
தமிழகத்தில் மிகப் பெரிய மொபைல் ஆபரேட்டர் நெட்வொர்க்கான ஏர்செல் நிறுவனம், கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாகத் தமிழக ஏர்செல் நிறுவனத்தை மூடப்போவதாகச் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனையடுத்து ஏர்செல் வாடிக்கையாளர்கள் சிலர் ‘போர்ட்’ மூலம் வேறு நிறுவனத்துக்கு மாற முடிவு செய்தனர். ஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. ஏர்செல் நிறுவனத்துக்குக் குறுந்தகவல் அனுப்பினால் அவர்கள் போர்ட்டபிளிட்டி எண் வழங்குவார்கள். அந்த எண்ணைக் கொண்டு வாடிக்கையாளர் மாற விரும்பும் நிறுவனத்தில் தந்தால்தான் அந்த நிறுவனத்தில் அதே எண் கிடைக்கும். அப்படி குறுந்தகவல் அனுப்ப ஏர்செல்லில் சிக்னல் கிடைக்க வேண்டும். இப்போது அதுவும் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் தவித்துவருகின்றனர்.�,