புற்று நோயால் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் சி.பி.எஸ்.இ, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவில் 95% மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த துஷார் ரிஷி(19) என்ற மாணவர் டெல்லி பப்ளிக் பள்ளியில் சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தில்10-ஆம் வகுப்பு படித்து வந்தார். அப்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற இருந்த நிலையில், ரிஷிக்கு இடது கணுக்காலில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டபோது, அவருடைய கால் எலும்பில் புற்றுநோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இதனால் அவருடைய பள்ளி படிப்பில் பாதிப்பு ஏற்பட்டது
இதைத்தொடர்ந்து ரிஷி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து 11 மாதங்கள் கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக புற்று நோயிலிருந்து மீண்டு வந்து தனது பதினொராம் வகுப்புக் கல்வியைத் தொடர்ந்தார்.
இந்நிலையில், ரிஷி நேற்று முன் தினம் மே-28 ஆம் தேதி வெளியான சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவில் ரிஷி 95% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அவர் ஆங்கிலத்தில் 95, கணிதத்தில் 95, கம்ப்யூட்டரில் 89, நுண்கலை பாடத்தில்100 மதிப்பெண்ணும் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதுகுறித்து, அவருடைய தாயார் ரித்து அகர்வால் கூறியதாவது,” ரிஷி மற்ற மாணவர்களை போல் அதிக மதிப்பெண் பெறுவதற்காக டியூசனுக்கு செல்லாமல், பள்ளிக்கு மட்டுமே சென்று படித்து வந்தார். புற்று நோயை எதிர்த்து போராடி வெல்வது என்பது மிகவும் கடினம். ஆனால், ரிஷி தனது வலியையும் மீறி அதிக மதிப்பெண் பெற்றது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார். அனைவரையும் போல் பொறியியல் படிக்காமல், ரிஷி டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் அல்லது பொருளாதாரம் என இரண்டில் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து படிக்கவுள்ளார் என்று கூறினார்.
மேலும், தற்போது ரிஷி ஆரோக்கியமாக இருப்பதாகவும், தனது மகனின் அனைத்து வாழ்க்கை இலக்குகளை அடைவதற்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார் ரித்து.
புற்றுநோயுடன் போராடிய தன்னுடைய தருணங்களை “தி பேஷண்ட் பேஷண்ட்” என்ற பெயரில் புத்தகமாகவும் ரிஷி வெளியிட்டுள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் வாழ்க்கை நொடிக்குள் உடைந்து விடும் என்ற எண்ணத்தை ரிஷி மாற்றியுள்ளார். விடாமுயற்சியும், மன உறுதியும் இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் ரிஷி.
�,”