சுகாதாரம் தொடர்பான புள்ளிவிவரங்களில் இந்தியாவிலேயே வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாக கேரளம் இருந்தபோதிலும் தடுப்பூசி போடும் விஷயத்தில் கேரளத்தில் உள்ள சில பகுதி மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. கல்வி, பிரசவக்கால மரணங்கள், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்னைகளை கேரளம் வென்று முன்னேறிய மாநிலமாக உள்ளது. இந்நிலையில், கேரள மாநிலத்தில் உள்ள குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்கவேண்டுமென்றால் தடுப்பூசி கட்டாயம் என்ற சட்டத்தைக் கொண்டுவர கேரள அரசு முடிவு செய்துள்ளது.
ஒரு குழந்தை பிறந்ததும் போடப்படும் தடுப்பூசியும், சொட்டு மருந்தும் குழந்தைகளைத் தொற்று நோய்களில் இருந்தும் உயிர்கொல்லி நோய்களில் இருந்தும் காக்கின்றன. ஆனால், இன்னும் மக்களிடம் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு போதுமானதாக இல்லை என்ற பிரச்னை கேரளத்தில் இருக்கிறது. இதனால், குழந்தைகளிடம் பரவும் நோயைக் கட்டுப்படுத்தும்விதமாக தடுப்பூசி கட்டாயம் என்ற சட்டத்தை அமல்படுத்த இருக்கிறது. இதன் முதல்படியாக, மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடப்படாத குழந்தைகளைக் கண்டறிந்து முதலில் அந்த குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. அதன் இன்னொரு அங்கமாக குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்க தடுப்பூசி கட்டாயம் என்றும் அறிவித்துள்ளது. பள்ளியில் சேரும் குழந்தைக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறதா என்கிற விவரத்தை தலைமை ஆசிரியர் பரிசோதித்த பின்னரே பள்ளியில் குழந்தைகளைச் சேர்த்துக்கொள்வார். பின்னர், இந்த விவரங்களை ஒரு அறிக்கையாக அரசுக்கும் அனுப்பி வைப்பார். தடுப்பூசிகள் தொடர்பாக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்திருந்தாலும் சிலர் இதை விமர்சிக்கவும் செய்கின்றனர்.�,