லஷ்கர்-இ-தெய்பா என்ற தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த கால்பந்து வீரர் தன்னுடைய பெற்றோரின் கோரிக்கையை ஏற்று காஷ்மீர் காவல்நிலையத்தில் (நவம்பர் 17) சரணடைந்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் நகரைச் சேர்ந்தவர் இர்ஷத் கான். இவருடைய ஒரே மகன் மஜீத். இவர் காஷ்மீர் மாநில கால்பந்து வீரராக இருக்கிறார். படிப்பிலும் கெட்டிக்காரராகத் திகழ்ந்தவர். இவரது பெற்றோர், பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அனந்த்நாக்கில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நடைபெற்ற சண்டையில் மஜீத்தின் சிறு வயது முதல் நண்பராக இருந்த யவர் நிசார் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால், மிகவும் மன வேதனையில் இருந்த மஜீத், பாதுகாப்புப் படை வீரர்களை மிகுந்த கோபத்துடன் திட்டினார். மேலும், கடந்த வாரம் வீட்டை விட்டும் வெளியேறினார்.
காணாமல் போன மகனை அவரைத் தந்தை இர்ஷத்கான் பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் மஜீத் என்ன ஆனார், எங்கே போனார் என்ற தகவல் யாருக்கும் கிடக்கவில்லை.
இந்த நிலையில் மூன்று நாள்களுக்கு முன்பு மஜீத் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அவருடைய தாய்மொழியான உருது மொழியில் வெளியிட்டுள்ள தகவலில், “நான் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் சேர்ந்து விட்டேன். என்னை யாரும் தேட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவருடைய முகநூலில், ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் இருக்கும் அவருடைய படத்தையும் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்ததும் மஜீத்தின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
மஜீத் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்துவிட்ட தகவலை அறிந்தது முதல் அவர் தாய் ஆயிஷா அதிர்ச்சியில் படுத்த படுக்கையாகி விட்டார். அவரது தந்தை இர்ஷத் கான், “மகனே… அந்த பாதை சரியான பாதை அல்ல, திரும்பி வந்து விடு” என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.
பெற்றோரின் கண்ணீரைக் கண்ட மஜீத்தின் மனம் மாறியது. இதையடுத்து லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தில் இருந்து விலகுவதாக அவர் முடிவு செய்தார்.
பின்னர், அவர் தன்னுடைய சொந்த ஊருக்கு வந்து, காஷ்மீர் மாநில அரசு அதிகாரிகள், காவல்துறையினர் முன்னிலையில் சரணடைந்தார். இதனால் அவரது பெற்றோர், உறவினர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
�,”