�
சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே வரி விதிப்பதென்பது இந்தியா போன்றதொரு நாட்டில் சாத்தியமாகாது என்று அருண் ஜேட்லி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 2ஆம் தேதி மக்களவையின் கேள்வி நேரத்தின் போது இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதிலளிக்கையில், “சில நாடுகளில் அனைத்துப் பொருட்களுக்கும் ஒரே வரி விகிதம் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், அந்த நாடுகளில் உள்ள மக்கள் அனைவருமே வறுமைக் கோட்டுக்கு மேலுள்ளவர்களாவர். இந்தியாவைப் பொறுத்தவரையில் உணவுப் பொருட்களுக்கு வரி இல்லாமலோ அல்லது குறைந்தபட்ச வரி விகிதமோ இருக்கிறது. அதே நேரம் ஆடம்பரப் பொருட்களுக்கு அதிகபட்ச வரி விதிக்கப்படுகிறது. எனவே இந்தியா போன்றதொரு நாட்டில் அது சாத்தியமாகாது.
ஒரே வரி விதிப்பது பற்றிய பேச்சுகள் எழாவிட்டாலும் வரி விதிப்பில் பகுப்பாய்வுப் பணிகள் தொடரும். 28 சதவிகித வரி வரம்பில் இருந்த பல்வேறு பொருட்களின் வரி 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல மக்களுக்கு ஏதுவாக வரிக் குறைப்பு மற்றும் பகுப்பாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெறும். வரி ரிட்டன் தாக்கல் செய்வதில் உள்ள பிரச்னைகளைக் கண்காணித்து அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் ஜிஎஸ்டிஎன் நெட்வொர்க் தலைவர் ஏ.பி. பாண்டே தலைமையில் சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் குறித்த பரிந்துரைகள் ஜிஎஸ்டி கவுன்சில் முன் சமர்ப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்” என்றார்.�,