கழுகு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பிந்து மாதவி, 6 ஆண்டுகளுக்குப் பிறகு கழுகு 2ஆம் பாகத்தில் அதே கூட்டணியுடன் நடிக்கிறார்.
இயக்குநர் சத்ய சிவா இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கழுகு. இதில் கிருஷ்ணா, பிந்து மாதவி ஜோடி சேர்ந்து நடித்திருந்தனர். கருணாஸ், தம்பி ராமய்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் மூலமாக பிந்து மாதவி தமிழ் திரைப்படத்திற்கு அறிமுகமானார். அதன் பின் அவர் நடிப்பில் வெளியான தேசிங்குராஜா மட்டும் இயக்குநர் எழிலின் நகைச்சுவைக்காக வெற்றிப்படமாக அமைந்திருந்தது.
தமிழ் சினிமாவில் இயக்குநர் சத்ய சிவாவிற்கும் கழுகு திரைப்படம் முக்கியமான ஒரு படமாக அமைந்திருந்தது. யாரும் தொடாத கதைக் களத்தை எடுத்து அதில் வெற்றியும் கண்டார். கழுகு முதல் பாகத்தில், மலையில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்பவர்களின், பிணங்களைக் காவல் துறைக்கு எடுத்துக் கொடுக்கும் பணியை கதாநாயகன் செய்கிறான். அவனுக்கும் அதே பகுதியில் தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணுக்கும் உண்டாகும் காதல், மற்றும் அவர்களது வாழ்க்கையோடு கொடைக்கானல் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது.
வசூல் சாதனை நிகழ்த்தாவிடினும் அழுத்தமான கதையால் ‘கழுகு’ பரவலாகப் பேசப்பட்டது. மீண்டும் இவர்கள் இணைந்துள்ள கழுகு 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு, கேரள மாநிலம் மூணாறில் இன்று(ஜூன்28) பூஜையுடன் துவங்கியுள்ளது. கிருஷ்ணா, பிந்துமாதவியுடன் முதல் பாகத்தில் நடிக்காத காளிவெங்கட் இப்படத்தில் இணைந்துள்ளார். கழுகு திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் பாடல் மற்றும் பின்னணி இசை பெரிதும் பேசப்பட்டது. இரண்டாம் பாகத்திலும் யுவனே இசையமைக்கிறார். திருப்பூர் பி.ஏ.கணேசன் தனது ஜி.கே. ஸ்டுடீயோஸ் மூலம் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
ஒரு சில படங்களுக்குத் திரைக்கதை அமைக்கும் போதே இரண்டாம் பாகத்திற்கான க்ளூ படத்தின் இறுதியில் வைக்கப்பட்டிருக்கும். ஒரு சில படங்களுக்கு, அந்த படத்தின் வெற்றியைப் பொறுத்து, அப்படத்தின் கருவையோ, அல்லது அந்தப் படத்தில் இயக்குநர் சொல்லாமல் விட்ட விஷயங்களையோ அடிப்படையாக வைத்து இரண்டாம் பாகம் உருவாகும்.
கழுகு முதல் பாகத்தில் நாயகன், நாயகி இருவரும் மலையில் இருந்து தற்கொலை செய்வது போல் காட்சி அமைந்திருக்கும். அதனால் 2ஆம் பாகம் அப்படத்தின் வெற்றியின் அடிப்படையில், அதே கருவை மையமாகக் கொண்டு உருவாகுகிறதா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
�,”