ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் இரண்டு தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றனர்.
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் பாபாகுந்த் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
**இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு**
முதல்முறையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். இதில், இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் குறித்து அவர் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றால் பாகிஸ்தான் பங்கேற்காது என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
**பாகிஸ்தான் ஒப்புதல்**
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி சிஎன்என் ஊடகத்துக்குப் பேட்டியளித்தார். அப்போது, ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத் தலைவர் மசூத் அசார் அந்நாட்டில் இருப்பதாகத் தெரிவித்தார். வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு மசூத் அசார் உடல்நலன் குன்றியிருக்கிறது என்றார். “போர் பதற்றத்தைத் தணிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் பாகிஸ்தான் வரவேற்கிறது. இந்தியாவிடம் உறுதியான ஆதாரம் இருக்குமானால், அதை அவர்கள் ஒப்படைக்கட்டும். அதன்பிறகு, இருதரப்பும் அமர்ந்து பேசி நல்லதொரு முடிவை எடுக்கலாம்’’ என்று தெரிவித்தார் குரேஷி.
**உளவாளி கைது**
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகேயுள்ள எல்லைப் பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர், உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியைச் சேர்ந்தவர். இவரிடமிருந்து செல்போன்கள் மற்றும் 8 பாகிஸ்தான் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
**நிவாரண முகாம்கள்**
பாகிஸ்தான் இந்தியா இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால், கதுவா, சம்பா, ஜம்மு மாவட்டங்களில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதி மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு அருகில் அமைந்துள்ள கிராமங்களில் கிட்டத்தட்ட 65 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.�,