இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் முன்னணி வீராங்கனைகள் சிமோனா ஹலெப் மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் இருவரும் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினர்.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இன்று (மார்ச் 17) நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ், ரஷ்யாவின் டரியா கசாட்னினா உடன் பலப்பரீட்சை நடத்தினார். அதில் முதல் செட்டினை 6-4 எனக் கைப்பற்றிய வீனஸ் வில்லியம்ஸ், இரண்டாவது செட்டில் 4-6 எனத் தோல்வியைத் தழுவினார்.
எனவே வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் இருவரும் சமபலம் கொண்டு விளையாடினர். இருவரும் எளிதில் புள்ளிகளை விட்டுக்கொடுக்காமல் விளையாடியதால் இந்த செட் நீண்ட நேரம் நடைபெற்றது. ஆனால் 5 புள்ளிகள் மட்டுமே பெற முடிந்த வீனஸ் வில்லியம்ஸ் 5-7 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவியதால் தொடரிலிருந்து வெளியேறினார். இந்த வெற்றியின் மூலம் டரியா கசாட்னினா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதுவரை ஒரு முறை மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ள இவர் இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இன்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சிமோனா ஹலெப், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா உடன் பலப்பரீ ட்சை நடத்தினார். தரவரிசையில் 40ஆவது இடத்தில் உள்ள நவோமி இதுவரை அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது கிடையாது. எனவே இந்த முறை வாய்ப்பை சரியாக பயன்படுத்திய நவோமி, ஹெலப்பிற்கு வாய்ப்பே வழங்காமல் 6-3 , 6-0 என்ற நேர் செட்களில் எளிதில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். முதல் நிலை வீராங்கனையான ஹெலப்பை நவோமி வீழ்த்தியது ரசிகர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நவோமி நாளை (மார்ச் 18) நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் ரஷ்யாவின் டரியா கசாட்னினா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.�,”